
மலையக மக்களின் நம்பிக்கையை எந்நிலையிலும் பாதுகாப்பேன்: நுவரெலியா மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி உறுதி
மலையக மக்கள் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை எந்தவொரு நிலையிலும் சிதைக்க இடமளிக்காது, அதனைப் பாதுகாப்பேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார். மலையக மக்கள் மட்டுமன்றி, வடக்கு மற்றும் கிழக்கு பிரதேச மக்களும் தற்போதைய ஆட்சியின் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடிய உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, அரசாங்கம் எப்போதும் மக்களோடு மக்களாக நின்று அவர்களின் பிரச்சினைகளை ஆராய்வதால்தான் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிந்தது எனக் குறிப்பிட்டார். உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்குகளில் ஒன்று எனவும், இதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் வலியுறுத்திக் கூறினார்.
அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் பல்வேறு தொழிற்துறைகளுக்கு அரசாங்கம் ஏற்கனவே உடனடி நிவாரணங்களை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். மக்களின் வாழ்வாதாரத்தை எவ்வித தடையுமின்றி பாதுகாக்கும் நோக்கிலேயே இவ்வாறான விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் விளக்கமளித்தார். இக்கட்டான காலப்பகுதிகளில் மக்கள் அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவே தமக்கு பெரும் பலமாக அமைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
இறுதியாக, நாட்டு மக்கள் வழங்கிய அந்தப் பலமான நம்பிக்கையை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார். அந்த நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையில், மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்திய கொள்கைகளை அரசாங்கம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தும் என்றும், சகல மக்களும் கௌரவத்துடன் வாழக்கூடிய சூழல் உறுதி செய்யப்படும் என்றும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
