
தோட்டப் பிரதேசங்களில் பொதுமக்கள் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட வேண்டும்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வலியுறுத்து!
தோட்டப் பிரதேசங்களில் வாழும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அப் பகுதிகளில் 'பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கள்' (Public Security Committees) அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வலியுறுத்தியுள்ளார்.
இன்று வியாழக்கிழமை (21) நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதியமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மலையக மற்றும் தோட்டப் பகுதிகளில் நிலவும் தற்போதைய பாதுகாப்பு சூழல்கள் மற்றும் மக்களின் தேவைகள் குறித்து இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தோட்டப் புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு நாளாந்த சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எனவே, அவர்களின் பாதுகாப்பை அடிமட்ட அளவில் இருந்து பலப்படுத்துவதற்கு இத்தகைய பாதுகாப்புக் குழுக்கள் பெரும் துணையாக அமையும் எனக் குறிப்பிட்டார்.
அத்துடன், தோட்டப் பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களின் ஊடாக இந்த வேலைத்திட்டங்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதன் மூலம், குற்றச் செயல்களைக் குறைக்கவும், மக்களுக்கு உடனடிப் பாதுகாப்பை வழங்கவும் முடியும் என்றும் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இதன் போது சுட்டிக்காட்டினார்.
