
இணையவழி விளையாட்டுகளால் சிறுவர்களுக்கு ஏற்படும் ஆபத்து: நிபுணர்கள் கடும் எச்சரிக்கை
இணையவழி விளையாட்டுகளில் (Online Games) சிறுவர்கள் அதிக நேரத்தைச் செலவிடுவதால், அவர்கள் பல்வேறு உளவியல் மற்றும் சமூக ரீதியான அபாயங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக்க தமுனுபொல, தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் சிறுவர்கள் உலகம் முழுவதும் உள்ள அறிமுகமற்ற நபர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் சூழல் உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்கள் நீண்ட நேரம் இணையச் சூழலில் தங்கியிருப்பதால், அறிமுகமில்லாத நபர்களுடன் தேவையற்ற உணர்ச்சி ரீதியான நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இதன் விளைவாக, தமது தனிப்பட்ட பிரச்சினைகள், ரகசியத் தகவல்கள் மற்றும் அந்தரங்கப் புகைப்படங்களைக் கூட அந்நியர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆபத்தான நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். இணைய விளையாட்டுகளில் வயது வரம்புகள் மற்றும் உள்ளடக்க எச்சரிக்கைகள் (PEGI ratings) காணப்பட்டாலும், அவற்றைச் சரியாகக் கண்காணிக்கும் முறை பெற்றோர்களிடம் குறைவாகவே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, pegi.info போன்ற வலைத்தளங்கள் மூலம் ஒவ்வொரு விளையாட்டின் தன்மையையும் அது எந்த வயதினருக்குப் பொருத்தமானது என்பதையும் பெற்றோர்கள் அறிந்து கொள்ள முடியும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், பல இணைய விளையாட்டுகள் பரிசுகள் மற்றும் வெகுமதிகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால், அவை சிறுவர்களிடையே சூதாட்ட மனப்போக்கைப் போன்ற ஓர் அடிமைத்தன்மையை உருவாக்குகின்றன. சில சந்தர்ப்பங்களில், சிறுவர்கள் தமது பெற்றோரின் கடன் அட்டைகளை (Credit Cards) பயன்படுத்தி 4 இலட்சம் முதல் 5 இலட்சம் ரூபாய் வரை விளையாட்டுகளுக்காகச் செலவழித்த அதிர்ச்சிகரமான சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இவ்வாறான பழக்கங்களைக் கட்டுப்படுத்த பெற்றோர்கள் முயற்சிக்கும் போது, சிறுவர்கள் கடும் கோபம், மன அழுத்தம் மற்றும் வன்முறைத் தன்மையுடன் கூடிய நடத்தைகளை வெளிப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழி விளையாட்டுகளை முழுமையாகத் தடை செய்வது தற்போதைய சூழலில் கடினமான காரியம் என்றாலும், பெற்றோர்களின் முறையான கண்காணிப்பு அவசியமாகும். திரை நேரத்தை (Screen Time) வரம்புக்குள் வைத்திருத்தல் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைச் சிறுவர்களுக்கு ஊட்டுவதே இந்தச் சிக்கலில் இருந்து அவர்களைப் பாதுகாக்க உள்ள ஒரே வழி என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
