
இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்தது ‘கருப்பு’ படக்குழு: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிக்கை!
இசை அரசனை காயப்படுத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என இசையமைப்பாளர் இளையராஜாவிடம் ‘கருப்பு’ படக்குழு வருத்தம் தெரிவித்துள்ளது. திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட காட்சி தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து, 'கருப்பு' படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு தங்களது விளக்கத்தை அளித்துள்ளது.
அந்த அறிக்கையில், "மதிப்பிற்குரிய இளையராஜா ஐயாவிற்கு, ‘கருப்பு’ திரைப்படத்தில் தங்கள் பெயரைப் பயன்படுத்தி வரும் காட்சி என்பது செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வு. 50 வருடங்களுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை, காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவிற்கு சிறிதளவும் இல்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "உள்நோக்கம் ஏதுமின்றி வைக்கப்பட்ட காட்சியினால், தாங்களோ, தங்களைச் சார்ந்தவர்களோ, இசை ஞானியின் ரசிகர்களோ, பிறரோ, மனம் புண்பட்டிருந்தால், அதற்கு எங்களின் தாழ்மையான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அந்த அறிக்கையில் மிகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளது.
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் சில சிக்கல்களைக் கடந்து கடந்த வாரம் வெள்ளித்திரையில் வெளியானது. இந்தப் படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவாதா, யோகி பாபு, இந்த்ரன்ஸ், நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசை அமைத்துள்ள இத்திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு மற்றும் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
