
சிங்கப்பூர் பள்ளிகளில் முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு பிரம்படி: புதிய விதிமுறைகள் வெளியீடு
சிங்கப்பூர் பள்ளிகளில் மற்ற மாணவர்களைத் துன்புறுத்தும் (bullying) செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு, புதிய விதிமுறைகளின் கீழ் பிரம்படி தண்டனை வழங்கப்படலாம் என்று அந்நாட்டு கல்வி அமைச்சர் டெஸ்மாண்ட் லீ செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். எனினும், கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளுடன், ஒரு கடைசி முயற்சியாக மட்டுமே இந்தத் தண்டனை பயன்படுத்தப்படும் என்று அவர் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார். கடந்த மாதம் கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட மாணவர்களின் கடுமையான நடத்தை விதிமீறல்களுக்கு எதிரான வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து, இந்த விவாதம் முன்னெடுக்கப்பட்டது.
சிங்கப்பூரில் குற்றவியல் நீதி மற்றும் கல்வி அமைப்புகளில் பிரம்படி ஒரு பகுதியாக இருந்து வருகிறது. மனித உரிமை அமைப்புகள் இதற்குத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தாலும், கடுமையான குற்றங்களைத் தடுக்கும் ஒரு கருவியாக இது செயல்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் வாதிடுகின்றனர். புதிய வழிகாட்டுதல்களின்படி, தவறு செய்யும் மாணவர்களுக்கு ஒன்று முதல் மூன்று அடிகள் வரை பிரம்படி வழங்கப்படலாம். "மற்ற அனைத்து ஒழுங்குமுறை நடவடிக்கைகளும் போதுமானதாக இல்லாதபோது, குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து மட்டுமே பள்ளிகள் பிரம்படியைப் பயன்படுத்தும்" என்று அமைச்சர் டெஸ்மாண்ட் லீ குறிப்பிட்டார்.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளிகள் கடுமையான நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். குறிப்பாக, பிரம்படி தண்டனைக்கு பள்ளித் தலைமையாசிரியரின் ஒப்புதல் அவசியம் என்பதோடு, அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்களால் மட்டுமே இது வழங்கப்பட வேண்டும். தண்டனை வழங்குவதற்கு முன்பாக, அந்த மாணவனின் முதிர்ச்சி மற்றும் இந்தத் தண்டனை அவன் செய்த தவறை உணர உதவுமா என்பது போன்ற காரணிகள் ஆராயப்படும். சிங்கப்பூர் சட்டப்படி, பெண்களுக்குப் பிரம்படி வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தண்டனை மாணவர்களுக்கு (சிறுவர்களுக்கு) மட்டுமே பொருந்தும்.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் மரபாகத் தொடரும் இந்தப் பிரம்படி முறையை பிரிட்டன் நீண்ட காலத்திற்கு முன்பே ஒழித்துவிட்டது. சிங்கப்பூரில் பிரம்படி வழங்கப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட மாணவனின் நல்வாழ்வு மற்றும் முன்னேற்றத்தைப் பள்ளிகள் கண்காணிக்கும் என்றும், அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் (counselling) வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இருப்பினும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உடல் ரீதியான தண்டனைகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துமே தவிர, எந்த நன்மையும் தருவதில்லை என்று உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
