
"ஈரான் உடனான அமைதி இனி சாத்தியமில்லை" - டொனால்ட் டிரம்ப் அதிரடி!
ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது பெரும் ஆபத்தில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா முன்வைத்த திட்டங்களுக்கு ஈரான் அளித்த பதிலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பல முக்கியப் பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதனால் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் நடைமுறையில் இருந்து வந்த தற்காலிக போர் நிறுத்தம் எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம் என்ற பதற்றம் உலக அரங்கில் அதிகரித்துள்ளது.
ஈரான் தரப்பில் பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அனைத்து முனைகளிலும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், போரில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் அமெரிக்கக் கடற்படையின் முற்றுகையை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஈரான் கோரியுள்ளது. மேலும், மீண்டும் தாக்குதல் நடத்தப்படாது என்பதற்கான சர்வதேச உத்தரவாதத்தையும், ஈரானிய எண்ணெய் விற்பனையை எவ்விதத் தடையுமின்றி மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்பதையும் ஈரான் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தைக் கொண்டு செல்லும் ஹோர்முஸ் நீரிணை மீது தங்களுக்கு முழு இறையாண்மை இருப்பதாகவும் ஈரான் அறிவித்துள்ளது.
இருப்பினும், ஈரானின் இத்தகைய கோரிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் போர் நிறுத்தத்தின் ஸ்திரத்தன்மைக்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பதாக அதிபர் டிரம்ப் சாடியுள்ளார். ஈரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தித் திட்டம் குறித்த ஆழமான பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னரே, களத்தில் சண்டைகள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாக உள்ளது. இக்கட்டான இந்த சூழலில் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதால், சர்வதேச சந்தையில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
தற்போது ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்திற்காக மூடப்பட்டுள்ளதால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 3% உயர்ந்து, ஒரு பீப்பாய் 104 டாலருக்கும் மேல் விற்பனையாகிறது. பிப்ரவரி 28 அன்று போர் தொடங்குவதற்கு முன்பு வரை, உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் பெரும் பகுதி இந்த குறுகிய நீர்வழிப்பாதை வழியாகவே கொண்டு செல்லப்பட்டது. தற்போதைய மோதலில் ஹோர்முஸ் ஜலசந்தி ஒரு முக்கிய பதட்டப் புள்ளியாக மாறியுள்ளது உலகப் பொருளாதாரத்திற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
