
டொராண்டோ தங்கக் கொள்ளை: ஏர் கனடா ஊழியர் பற்றி அதிர்ச்சித் தகவல்
கனடாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட Air Canada நிறுவன ஊழியர், பல மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (Toronto Pearson International Airport) மறைவதற்கு முன்பே, பல ஆண்டுகளாக காவல்துறையின் கண்காணிப்பில் இருந்தது அம்பலமாகியுள்ளது. விமான நிலையத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஊழியர்கள் எவ்வாறு தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் கேள்விகளை ஒரு புதிய விசாரணை ஊடகம் (W5 Investigation) எழுப்பியுள்ளது.
Toronto பியர்சன் விமான நிலையத்தின் சரக்குப்பிரிவு வளாகத்திலிருந்து கடந்த 2023 ஆம் ஆண்டு, 22 மில்லியன் டாலருக்கும் அதிக மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டுப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ஏர் கனடா ஊழியர்களில் பர்ம்பால் சித்து (Parmpal Sidhu) என்பவரும் ஒருவர். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் விமான நிலையத்தில் நடந்த மூன்று வெவ்வேறு போதைப்பொருள் கடத்தல் விசாரணைகளில் பர்ம்பால் சித்து (Parmpal Sidhu) என்பவரின் பெயர் இடம்பெற்றிருந்ததாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 2012 ஆம் ஆண்டின் ரகசிய உளவுத்துறை ஆவணம் ஒன்றின்படி, பர்ம்பால் சித்து (Parmpal Sidhu) சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவராகச் செயல்பட்டு, பியர்சன் விமான நிலையம் வழியாக பெருமளவிலான போதைப்பொருட்களைக் கடத்தியதாகவும், தங்களின் குற்றச் செயல்களுக்காக "அரசாங்க அமைப்புகளுக்குள்" ஊடுருவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த உளவுத்துறை அறிக்கை ஏர் கனடா நிறுவனத்துடன் பகிரப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இந்த தங்கக் கொள்ளை நடக்கும் வரை பர்ம்பால் சித்து (Parmpal Sidhu) தனது வேலையையும், விமான நிலைய பாதுகாப்பு அனுமதியையும் (Security Clearance) தக்க வைத்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
