
ஈரானின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் தற்போதைய பொருளாதார மற்றும் இராணுவ நிலை குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ஈரானின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக மசகு எண்ணெய் ஏற்றுமதி முடங்கியுள்ளதால் அந்த நாட்டிற்கு இனி குறிப்பிடத்தக்க வருமானம் கிடைப்பதில்லை என்று தெரிவித்தார்.
இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக ஈரான் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. குறிப்பாக, உலக கப்பல் போக்குவரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது சர்வதேச அளவில் எண்ணெய் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அமெரிக்கா ஈரானின் கடற்பகுதியை முற்றுகையிட்டுள்ள நிலையில், பல நாடுகளின் மத்தியஸ்தத்தினால் தற்காலிக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தாலும், வளைகுடா பிராந்தியத்தில் இன்னும் முழுமையான அமைதி திரும்பவில்லை. இந்தப் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
ஈரானின் இராணுவக் கட்டமைப்பு பெருமளவில் சிதைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், அந்நாட்டின் டிரோன் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளில் சுமார் 82 சதவீத செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த அவர், உள்நாட்டுப் போராட்டங்களை ஒடுக்குவதற்காக ஈரான் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் சுமார் 42,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
இருப்பினும், தற்போதைய நெருக்கடியான சூழலில் ஈரான் பேச்சுவார்த்தைக்கு ஆர்வம் காட்டி வருவதாக ட்ரம்ப் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், வரும் காலங்களில் ஒரு சுமூகமான ஒப்பந்தம் எட்டப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
