Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

தம்புள்ளையில் பரபரப்பு: சூப்பர் ஓவரில் இந்திய 'ஏ' அணியை வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி த்ரில் வெற்றி
Sports

தம்புள்ளையில் பரபரப்பு: சூப்பர் ஓவரில் இந்திய 'ஏ' அணியை வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி த்ரில் வெற்றி

By MadushanJune 15, 2026

இலங்கையின் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் முக்கிய ஆட்டம் ஒன்றில், இந்திய 'ஏ' அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை 'ஏ' அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் தலா 265 ஓட்டங்களை எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிவடைந்தது. இதையடுத்து, வெற்றியாளரைத் தீர்மானிக்க நடைபெற்ற சூப்பர் ஓவரில் இலங்கை 'ஏ' அணி அபாரமாகச் செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய 'ஏ' அணி ஆரம்பத்தில் தடுமாறியது. வைபவ் சூர்யவன்ஷி (21), பிரப்சிம்ரன் சிங் (11), திலக் வர்மா (23) மற்றும் ருதுராஜ் (37) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். எனினும், மத்திய வரிசையில் களமிறங்கிய சூர்யன்ஷ் ஷெட்கே மற்றும் விப்ராஜ் நிகம் இணை, அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். சூர்யன்ஷ் ஷெட்கே 72 ஓட்டங்களையும், விப்ராஜ் நிகம் 51 ஓட்டங்களையும் குவிக்க, இந்திய 'ஏ' அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 265 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.

இலங்கை அணியின் பந்துவீச்சில், மொஹம்மது ஷிராஸ் மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய ஓட்ட வேகத்தைக் கட்டுப்படுத்தினர். பின்னர், 266 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 'ஏ' அணிக்கு, சதீரா சமரவிக்ரமா முதுகெலும்பாக விளங்கினார். மிகச் சிறப்பாகவும், நிதானமாகவும் துடுப்பெடுத்தாடிய அவர் 93 ஓட்டங்களைக் குவித்தார். அவருக்கு நிரோஷன் திக்வெல்ல 37 ஓட்டங்கள் எடுத்து நல்ல ஒத்துழைப்பை வழங்கினார். இந்திய தரப்பில் ஆயுஷ் பதோணி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இறுதி ஓவர் வரை நீடித்த பரபரப்பிற்கு மத்தியில், இலங்கை 'ஏ' அணியும் 50 ஓவர்களில் 265 ஓட்டங்களை எடுத்ததால், ஆட்டம் சமனில் முடிந்தது.

இதனையடுத்து, வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 'ஏ' அணி, அதிரடியாக விளையாடி 17 ஓட்டங்களைக் குவித்தது. 18 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய 'ஏ' அணிக்கு சூர்யன்ஷ் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் ஆடினர். முதல் மூன்று பந்துகளில் 3 ஓட்டங்கள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், கடைசி மூன்று பந்துகளை வைபவ் எதிர்கொண்டார். அவர் நான்காவது பந்தில் 2 ஓட்டங்களும், ஐந்தாவது பந்தில் ஒரு பவுண்டரியும் அடித்தார். இறுதிப் பந்தில் வெற்றிக்கு 6 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், அவரால் ஓட்டம் ஏதும் எடுக்க முடியவில்லை. இதன்மூலம், இந்திய 'ஏ' அணி 9 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்ததுடன், இலங்கை 'ஏ' அணி பரபரப்பான வெற்றியைப் பதிவு செய்தது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio