
மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்: கஞ்சி வார்ப்பு மற்றும் மரக்கன்றுகள் விநியோகம்!
இனஅழிப்பு நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18) திங்கட்கிழமை மிகவும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. இறுதிப் போரில் உயிரிழந்த தமிழ் உறவுகளை நினைவுகூர்ந்து மாவட்டத்தின் பல பாகங்களிலும் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதன் ஒரு அங்கமாக, மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை வாகரை புச்சாங்கேணியில் நடைபெற்றது. மறத்தமிழர் கட்சியின் வாகரை கிளையினரால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த நிகழ்வில், போரில் மடிந்த உறவுகளுக்காக ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் அஞ்சலி உரைளும் நிகழ்த்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் வரலாற்றுத் துயரினை நினைவுகூரும் வகையில் அங்கு வருகை தந்திருந்த மக்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டது. அத்துடன், முள்ளிவாய்க்கால் படுகொலையின் சான்றாகவும், எதிர்கால பசுமை நினைவாகவும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் விநியோகிக்கப்பட்டன. இந்த உணர்வுபூர்வமான நிகழ்வில் மறத்தமிழர் கட்சியின் இணைப்பாளர் ஆதம்குணா உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
