
பிள்ளையானைச் சந்தித்த ராஜபக்ஷக்கள்: பிணை வழங்க வாக்குறுதி அளித்ததாக நீதிமன்றில் சட்ட மா அதிபர் திடுக்கிடும் தகவல்!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களின் பின்னர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவராpillayanன பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனைச் சந்திப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் சென்றிருந்ததாக சட்ட மா அதிபர் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
நீதிமன்றில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்த விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார். 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் சம்பவங்களைத் தொடர்ந்து, மட்டக்களப்பு சிறைச்சாலையில் இந்த உயர்மட்ட அரசியல் சந்திப்பு இரகசியமாக இடம்பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், இச்சந்திப்பின் போது கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து ஒரு வார காலத்திற்குள் பிள்ளையானுக்குப் பிணை பெற்றுக்கொடுப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ராஜபக்ஷக்கள் சிறையில் வைத்து பிள்ளையானிடம் உறுதியளித்திருந்தமை சாட்சியங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக சட்ட மா அதிபர் நீதிமன்றத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்குத் தொடர்பாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையான் நீண்டகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்தச் சந்திப்பும் பிணை வாக்குறுதியும் வழங்கப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் மற்றும் அரசியல் சதித் திட்டங்கள் குறித்துப் பல்வேறு தரப்புகளாலும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், நீதிமன்றில் சட்ட மா அதிபரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தத் தகவல்கள் இலங்கை அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
