
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல்: இன்று கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் உணர்வுபூர்வ ஏற்பாடு!
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற கொடூர தமிழினப் படுகொலையின் போது, அநியாயமாகக் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் ஆன்ம சாந்திக்கான விசேட நினைவேந்தல் நிகழ்வொன்று தலைநகர் கொழும்பில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த தங்களது உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்துவதற்காக இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இந்நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (மே 18) மாலை 5.00 மணியளவில் கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரையில் (அலெக்ஸாண்ட்ரா வீதிக்கு எதிராக) உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளது. தாயகத்தில் மட்டுமன்றி, தலைநகரிலும் இந்த நினைவேந்தலை அமைதியான முறையில் நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது, பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வரலாற்றுப் பேரிடரையும், அதில் மடிந்த தமிழ் மக்களையும் நினைவுகூரும் விதமாக நடத்தப்படும் இந்த அஞ்சலி நிகழ்வில், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
