
சிவகங்கையில் பயங்கர விபத்து: நடிகர் கஞ்சா கருப்புவின் தம்பி பரிதாப பலி – முதல்வர் விஜய்க்கு உருக்கமான கோரிக்கை!
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் கஞ்சா கருப்பு. 'பிதாமகன்', 'ராம்', 'பருத்திவீரன்' உட்பட ஏராளமான திரைப்படங்களில் எதார்த்தமான மதுரைத் தமிழ் பேசி ரசிகர்களைக் கவர்ந்தவர். சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தபோதே சொந்தமாகப் படம் தயாரித்து, அதில் ஏற்பட்ட நஷ்டத்தினால் தனது ஒட்டுமொத்த சொத்துக்களையும் இழந்தார். அதன் பின்னர், சின்னத்திரையில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று மீண்டும் மக்கள் மத்தியில் பேசப்பட்டார்.
தற்போது திரையுலகில் கிடைக்கும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வரும் கஞ்சா கருப்பு, அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாகத் தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கவனம் ஈர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவரது குடும்பத்தில் நடந்துள்ள ஒரு சோகமான சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த அறிவழகன் (45), நடிகர் கஞ்சா கருப்புவின் உடன் பிறந்த தம்பி ஆவார். இவர் சிவகங்கை பேருந்து நிலையம் அருகே அதிகாலை நேரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அறிவழகன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த சிவகங்கை நகர் போலீசார் அறிவழகனின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காகச் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தம்பியின் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுத கஞ்சா கருப்பு, செய்தியாளர்களைச் சந்தித்து ஆவேசமாகவும் உருக்கமாகவும் பேட்டி அளித்தார். அதில், "என் தம்பி மீது பஸ் ஏறித்தான் அவர் இறந்துவிட்டார் என்று அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள். அதைச் செய்த குற்றவாளி யார், அது என்ன பஸ் என்பதைப் போலீசார் உடனடியாகக் கண்டறிய வேண்டும். தமிழக முதல்வர் இளையதளபதி விஜய் அவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு, விபத்தை ஏற்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
