
"சீனா - அமெரிக்கா போட்டியாளர்களாக அல்லாமல் கூட்டாளிகளாக இருக்க வேண்டும்" - பெய்ஜிங்கில் ஜி ஜின்பிங் மற்றும் டொனால்டு ட்ரம்ப் வரலாற்றுச் சந்திப்பு
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று சீனா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாகமான மற்றும் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணத்தின் இரண்டாம் நாளான இன்று, பெய்ஜிங்கில் உள்ள மக்கள் பேரவையில் (Great Hall of the People) சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அவர் சந்தித்துப் பேசினார். உலக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அதிபர் ட்ரம்ப்பை வரவேற்றுப் பேசிய ஜி ஜின்பிங், உலகம் தற்போது ஒரு நூற்றாண்டில் காணப்படாத பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டார். சர்வதேச சூழல் நிலையற்றதாக இருக்கும் வேளையில், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு வல்லரசு நாடுகளும் இணைந்து உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியது அவசியம் என்றார். "சீனாவும் அமெரிக்காவும் தற்போதைய நிலையைக் கடந்து, வல்லரசு நாடுகளின் உறவுகளுக்கு ஒரு புதிய முன்னுதாரணத்தை உருவாக்க வேண்டும். 2026-ம் ஆண்டை இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் மைல்கல் ஆண்டாக மாற்ற நாம் இணைந்து பணியாற்ற வேண்டும்," என அவர் விருப்பம் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், "சீனாவின் 'மாபெரும் புத்தெழுச்சி' மற்றும் அமெரிக்காவின் 'அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக மாற்றுவோம்' ஆகிய இரண்டு முழக்கங்களும் கைகோத்துச் செல்ல முடியும். நாம் ஒருவருக்கொருவர் வெற்றிபெற உதவலாம். மோதலைக் காட்டிலும் ஒத்துழைப்பே இரு நாடுகளுக்கும் ஆதாயத்தைத் தரும். நாம் போட்டியாளர்களாக இல்லாமல் கூட்டாளிகளாக இருக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வது தமக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஜி ஜின்பிங்கை ஒரு சிறந்த தலைவர் என்று புகழ்ந்த அவர், சீன மக்கள் மீது தமக்கு அளவற்ற மரியாதை இருப்பதாகவும் கூறினார். அமெரிக்காவும் சீனாவும் உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகள் என்பதால், இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து உலகிற்கு நன்மை பயக்கும் காரியங்களைச் செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ட்ரம்ப், "ஆக்கப்பூர்வமான உறவை உருவாக்க வேண்டும் என்ற அதிபர் ஜி ஜின்பிங்கின் கருத்தை நான் முழுமையாக ஏற்கிறேன். வரும் செப்டம்பர் 24-ம் தேதி வெள்ளை மாளிகைக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கிறேன். 1784-ல் தொடங்கிய அமெரிக்க - சீன வர்த்தகத் தொடர்பு, இன்று உலக வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக வளர்ந்துள்ளது. நாம் இணைந்து நிற்கும்போது, இந்த உலகம் ஒரு தனித்துவமான இடமாகத் திகழும்," என்று குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பு குறித்து சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய கிழக்கு நிலவரம், உக்ரைன் நெருக்கடி மற்றும் கொரிய தீபகற்பத்தின் நிலை உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள APEC பொருளாதாரத் தலைவர்கள் கூட்டம் மற்றும் G20 உச்சிமாநாடு ஆகியவற்றை நடத்துவதில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்க ஒப்புக்கொண்டுள்ளன.
