
கார்த்திக் சுப்புராஜின் 10-வது படப்பிடிப்பு நிறைவு: இளையராஜாவின் 1540-வது படமாக உருவாகும் பிரம்மாண்ட படைப்பு!
‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மற்றும் ‘ரெட்ரோ’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவரது இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் (இவரது 10-வது படம்) ஒட்டுமொத்த படப்பிடிப்பும் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தை சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் குனீத் மோங்கா கபூர், அசின் ஜெயின் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றன.
இத்திரைப்படத்திற்கு இசையுலகின் ஜாம்பவான், 'இசைஞானி' இளையராஜா இசையமைக்கிறார். இது இளையராஜாவின் திரைப்பயணத்தில் 1540-வது திரைப்படமாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் சுப்புராஜின் வித்தியாசமான திரைக்கதையும், இளையராஜாவின் ஆன்மாவை வருடும் இசையும் இணையும் இந்த கூட்டணி, ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
"இசை தனி ஆல்பமாக வெளியாகும் அளவிற்கு சிறப்பாக வந்துள்ளது" - இளையராஜா நெகிழ்ச்சி
இந்தப் படம் குறித்து இசைஞானி இளையராஜா பகிர்ந்து கொண்டதாவது:
"சினிமாவும் இசையும் எனக்கு உணர்வுப்பூர்வமானவை. ஒரு கதையின் நேர்மையும், அதைச் சொல்லும் மனிதர்களின் உண்மையும்தான் எனக்கு எப்போதுமே முக்கியம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் பணியாற்றுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. சினிமா மீது அவர் கொண்டுள்ள அலாதி ஆர்வமும் அர்ப்பணிப்பும் அவருடைய பணிகளில் தெளிவாகத் தெரிகிறது.
ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தனித்தனி உணர்வும், அதற்கேற்ற இசையும் உண்டு. இந்தப் படத்தின் பின்னணி இசையை அமைக்கும் போது, அந்த இசையைத் வெறும் பின்னணியாக மட்டுமில்லாமல், ஒரு தனி ஆல்பமாகவே வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. அந்த அளவுக்கு இந்தப் படத்தின் இசை மிகவும் சிறப்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் உருவாகியுள்ளது" என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
