
இலங்கையில் வேகமாகப் பரவும் டெங்கு: இந்த ஆண்டில் இதுவரை 12 பேர் உயிரிழப்பு; இரு சிறுவர்களும் பலி
இலங்கையில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலினால் 12 பேர் உயிரிழந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இன்று (04) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர, டெங்கு பரவலின் தற்போதைய நிலைவரம் குறித்த விரிவான விபரங்களை வெளியிட்டார்.
இந்த உயிரிழப்புச் சம்பவங்களில் மிகவும் சோகமான விடயமாக, உயிரிழந்த 12 பேரில் 12 வயதுக்கும் குறைந்த இரண்டு சிறுவர்களும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சிறுவர் மரணங்களும் கொழும்பு மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாக வைத்தியர் பிரஷிலா சுட்டிக்காட்டினார். நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலினால் இதுவரை மொத்தமாக 25,846 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது நாடு முழுவதும் நிலவி வரும் இடைவிடாத மழைவீழ்ச்சி மற்றும் நுளம்புகள் பெருகுவதற்குச் சாதகமான சூழல் நிலவுவதே டெங்கு பரவல் அதிகரிப்பதற்குக் பிரதான காரணமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, நீர் தேங்கி நிற்கும் இடங்கள் நுளம்பு உற்பத்தித் தளங்களாக மிக வேகமாக உருவெடுத்து வருவதால், வரும் நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என வைத்தியர் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
