
மலையக மக்களின் காணி உரிமைக்காக தலவாக்கலையிலிருந்து கொழும்பு நோக்கி 140 கி.மீ நடைபயணத்தை தொடங்கினார் 7 வயது சிறுவன்!
மலையக மக்களின் காணி மற்றும் நில உரிமைகளை வலியுறுத்தி, 7 வயது சிறுவனும் உலக சாதனையாளருமான பிரேம் கார்கி, தலவாக்கலை நகரத்திலிருந்து கொழும்பு நோக்கிய தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடைபயணத்தை இன்று புதன்கிழமை (20) அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளார். மலையக சமூகத்தின் நீண்டகாலப் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையிலும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உலகறியச் செய்யும் வகையிலும் இந்த சிறுவன் களமிறங்கியுள்ளார்.
குறிப்பாக, மலையகத்தில் வாழும் மக்களின் நில உரிமைகளை வென்றெடுப்பதையும், இதுகுறித்த விழிப்புணர்வை அரசாங்கத்திற்கும் ஏனைய பொறுப்புவாய்ந்த துறைகளுக்கும் கொண்டு சேர்ப்பதையும் இந்த நடைபயணம் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. தனது கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்திலும் நேரடியாகக் கையளிப்பதற்காகவே, தலவாக்கலை நகரத்திலிருந்து கொழும்பு வரையிலான சுமார் 140 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட இந்த நெடும்பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.
தலவாக்கலை நகரத்தில் ஆரம்பமான இந்த நடைபயணம், கொட்டக்கலை நகரத்தை வந்தடைந்த போது அங்கு கூடியிருந்த மருத்துவத் துறையினர் மற்றும் வர்த்தக சமூகத்தினரால் சிறுவன் பிரேம் கார்கிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. மலையக மக்களின் உரிமைகளுக்காக இத்தனை சிறிய வயதில் குரல் கொடுக்கும் அச்சிறுவனின் துணிச்சலை மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த நடைபயணம், அடுத்த 7 நாட்களுக்குள் கொழும்பு நகரைச் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இச்சிறுவனின் முயற்சி மலையக மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
