Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்: முல்லைத்தீவில் திரளும் உறவுகள்!
Sri Lanka

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்: முல்லைத்தீவில் திரளும் உறவுகள்!

By MadushanMay 18, 2026

இலங்கையில் மூன்று தசாப்த காலமாக நீடித்த கொடூரப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. இப்போரில் அநியாயமாகக் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான தமிழ் உறவுகளை நினைவுகூரும் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று (18) திங்கட்கிழமை முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பெரும் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது. தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைந்துள்ள இந்த முற்றத்தில், தங்களின் இன்னுயிர்களை நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நாடெங்கிலும் இருந்து மக்கள் அலைகடலெனத் திரண்டு வருகின்றனர்.

இதற்கான அதிகாரப்பூர்வ நினைவேந்தல் ஏற்பாடுகளையும் நிகழ்ச்சி நிரலையும் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 10:15 மணிக்கு நினைவேந்தல் பிரகடனம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து காலை 10:29 மணிக்கு நினைவேந்தல் மணி ஒலிக்கப்பட்டு, சரியாக 10:30 மணிக்கு போரில் மடிந்தவர்களுக்காக அகவணக்கம் செலுத்தப்படும். பின்னர், 10:31 மணிக்கு பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, உயிரிழந்த உறவுகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகவுள்ளன.

முன்னதாக, கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பாகங்களிலும் பல்வேறு உணர்வுபூர்வமான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. நினைவேந்தல் ஊர்திப் பயணம், தமிழர்களின் வரலாற்றுத் துயரை நினைவூட்டும் முள்ளிவாய்க்கால் கஞ்சிப் பகிர்வு மற்றும் உள்ளூராட்சி சபைகளில் அஞ்சலி செலுத்துதல் எனப் பல வடிவங்களில் மூன்று தசாப்த காலப் போரில் உயிர்நீத்த மக்கள் நினைவு கூரப்பட்டனர். இதன் தொடர்ச்சியாகவே, போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட மே 18 ஆகிய இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய பிரதான அஞ்சலி நிகழ்வில் போரில் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தவுள்ளனர். இதுகுறித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவர் அருட்பணி சின்னதுரை லியோ ஆம்ஸ்ட்ரோங் கருத்துரைக்கையில், "கட்சி, இனம், மதம், பிரதேசம் போன்ற குறுகிய மனப்பான்மைகளைக் கடந்து, ஈழத்து மக்களாக ஒன்றிணைந்து இந்தத் துயரத்தை நாம் நினைவுகூர வேண்டும். பொதுமக்கள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட சகல தரப்பினரும் ஒரே குடையின் கீழ் இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், தமிழர்களின் தேசிய நலன்கள் மற்றும் அபிலாஷைகளை உலகிற்கு வலியுறுத்தும் வகையிலும் இந்நாளின் குரல் அமைய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தின் பிரதான நிகழ்வுக்கு இணையாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வெவ்வேறு பாகங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளினால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தலைநகர் கொழும்பிலும், வெள்ளவத்தை புகையிரத நிலையத்தை அண்மித்த கடற்கரை பகுதியில் இன்று மாலை 05:00 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, தாயகத்தைத் தாண்டி தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் லண்டன், கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட சர்வதேச நாடுகளிலும், அண்டை மாநிலமான தமிழகத்திலும் இன்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளைப் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் பிரம்மாண்டமாக மேற்கொண்டுள்ளன. இதன் மூலம் முள்ளிவாய்க்கால் துயரமும், நீதிக்கான தமிழர்களின் போராட்டமும் சர்வதேச அரங்கில் இன்று மீண்டும் ஒருமுறை பலமாக எதிரொலிக்கவுள்ளது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio