
நேபாளத்தில் கோர விபத்து: பௌத்த மடாலயத்திற்கு சென்ற 20 பக்தர்கள் பள்ளத்தில் வீழ்ந்து பலி
நேபாளத்தின் ரோல்பா மாகாணத்தில் உள்ள ஜல்ஜாலா மலைப்பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில், பௌத்த மடாலயத்திற்குச் சென்ற 20 பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 500 கிலோமீற்றர் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 3,000 அடி உயரத்தில் அமைந்துள்ள பௌத்த மடாலயத்தை நோக்கிச் சென்ற ஜீப் வண்டி வியாழக்கிழமை (30) மாலை விபத்துக்குள்ளானது.
புத்த பூர்ணிமா விழாவைக் கொண்டாடுவதற்காக நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குறித்த மடாலயத்திற்குச் சென்றுகொண்டிருந்த போதே இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. மலைப்பாதையில் அதிக உயரத்தில் பயணித்த ஜீப், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாகத் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் மலைப்பாதையிலிருந்து விலகி, சுமார் 700 மீற்றர் ஆழமுள்ள மிக ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தின் கோரத்தினால் ஜீப்பில் பயணித்த 20 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில் நிலவும் மோசமான வானிலை மற்றும் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக மீட்புப் பணிகளில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
கடும் சிரமங்களுக்கு மத்தியிலும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக நேபாள அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
