
குஜராத்தின் துறைமுகத்தை வந்தடைந்தது 20,000 டன் எரிவாயு கப்பல்: எல்பிஜி விலை உயர்வால் மக்கள் தவிப்பு!
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்திற்கு சுமார் 20,000 டன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவை (எல்பிஜி) ஏற்றி வந்த மார்ஷல் தீவுகளின் கொடி பொருத்தப்பட்ட சரக்குக் கப்பல் வந்தடைந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 'சிமி' என்று அடையாளம் காணப்பட்ட இந்தச் சரக்குக் கப்பல், உலக அளவில் மிக முக்கியப் பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த மே 13 அன்று கடந்து, இந்தியத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வணிகப் பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர்களின் விலையை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உயர்த்தின. அதன்படி, 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டரின் விலை ரூ.993-ம், 5 கிலோ சிலிண்டரின் விலை ரூ.261.50-ம் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பொது சமையலறைகள், சிற்றுண்டிச்சாலைகள், சாலையோர உணவகங்கள் மற்றும் தொழில்முறைப் பயன்பாட்டாளர்களின் எரிபொருள் செலவு 47 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியும், சர்வதேச எரிபொருள் விநியோகப் பாதைகளும் முடங்கியுள்ளன. இந்தச் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் குடிமக்கள் அனைவரும் எரிபொருளை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
