
அர்ஜுன் நடித்துள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு: மே 28-ல் உலகெங்கும் வெளியீடு!
அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிளாஸ்ட்’. இத்திரைப்படம் வரும் மே 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். மேலும், அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராகவும், ஐஸ்வர்யா கல்பாத்தி அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பங்காற்றியுள்ளனர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய ‘அக்ஷன் கிங்’ அர்ஜுன், "நான் திரையுலகில் பல திரைப்படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், ஒரு கராத்தே மாஸ்டர் கதாபாத்திரத்தை இப்போதுதான் முதன்முறையாக ஏற்று நடித்துள்ளேன். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் சுபாஷ் கே.ராஜின் தன்னம்பிக்கையைப் பார்த்தேன்; ஒவ்வொரு இயக்குநருக்கும் இந்த நம்பிக்கை மிக முக்கியம். நான் ஏராளமான புதுமுக இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன், அதில் இயக்குநர் சுபாஷ் மிகவும் சாதுரியமானவர்" என்று பாராட்டிப் பேசினார்.
சக கலைஞர்கள் குறித்து அர்ஜுன் நெகிழ்ச்சி
தொடர்ந்து பேசிய அர்ஜுன், தன்னுடன் நடித்த சக கலைஞர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். "நடிகை அபிராமியுடன் நான் முதன்முதலாக நடிக்கும் போது, அவருக்கு மலையாளம் மட்டும்தான் பேசத் தெரியும். ஆனால், இப்போது தமிழில் மிக அழகாகப் பேசி அசத்துகிறார். அவர் ஒரு சிறந்த நடிகை மட்டுமல்ல, நல்ல பாடகியும் கூட. இந்தப் படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல், ப்ரீத்தி முகுந்தனைப் பார்த்து நான் வியக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் எப்போது பார்த்தாலும் அவர் அர்ப்பணிப்போடு பயிற்சி செய்து கொண்டே இருப்பார்" என்று அர்ஜுன் குறிப்பிட்டார்.
இது குடும்பங்கள் கொண்டாடும் ஆக்ஷன் படம்: இயக்குநர் சுபாஷ்
இப்படத்தின் இயக்குநர் சுபாஷ் கே.ராஜ் பேசும்போது, "இது ஒரு முழுமையான ஆக்ஷன் படம்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதே நேரத்தில் குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்து பார்த்து மகிழும் வகையில் உணர்வுபூர்வமாக இருக்கும். திரையரங்கில் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும், தங்களது நிஜ வாழ்க்கையோடு இந்த கதையை ஏதோ ஒரு புள்ளியில் தொடர்புபடுத்திக் கொள்வார்கள். பொழுதுபோக்கைத் தாண்டி, தற்போதைய சமூகத்திற்குத் தேவையான பல முக்கிய விஷயங்களை இப்படத்தில் ஆழமாகச் சொல்லி இருக்கிறோம்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
