
தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவையின் முதல் கூட்டம் 'வெற்றித் தமிழகம்' என்ற பெயரில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்தும், முதல்வர் வழங்கிய அறிவுறுத்தல்கள் குறித்தும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வைகொண்ட திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். குறிப்பாக, கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளோடு சேர்த்து மொத்தம் 436 தொலைநோக்கு திட்டங்கள் குறித்து இந்த முதல் கூட்டத்திலேயே விரிவாக ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரசுத் துறைக்கும் தனித்தனியாக தொலைநோக்கு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தந்த துறை அமைச்சர்கள் தங்கள் துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த இலக்குகளைச் சாதிப்பதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காக முதல்வர் விஜய் வகுத்துக் கொடுத்துள்ள முக்கிய வழிகாட்டுதல்களை அமைச்சர் நிர்மல்குமார் பட்டியலிட்டார். இளைஞர்களின் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு, மகளிரின் சமூகப் பொருளாதார முன்னேற்றம், விவசாயிகளின் வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் மீனவர்களின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு இந்தத் திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் லஞ்சம் இல்லாத நல்லாட்சியை வழங்குவதற்கும், 'போதை இல்லாத தமிழகம்' என்ற இலக்கை அடைவதற்கும் முதல்வர் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் என அவர் கூறினார்.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் அண்டை மாநிலப் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட அனைத்து விதமான போதைப் பொருட்களின் விற்பனையையும் முற்றிலும் ஒழிப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதேபோல், அண்டை மாநிலமான கர்நாடகா மேகேதாட்டு பகுதியில் அணை கட்ட முயலும் விவகாரத்தில், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டவும், விவசாயிகளின் நலனைக் காக்கவும் அரசு தரப்பில் தேவையான அனைத்து சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் உறுதியளித்தார்.
