
ஹொரணை வங்கிக் கொள்ளை: மூளையாகச் செயல்பட்ட உதவி முகாமையாளர்; 6 கோடி ரூபாவுக்கு மேல் மீட்பு!
ஹொரணை நகரில் உள்ள அரச வங்கி ஒன்றில் இடம்பெற்ற சுமார் 6 கோடியே 79 இலட்சம் ரூபாய் கொள்ளைச் சம்பவத்தின் சூத்திரதாரி, அதே வங்கியின் உதவி முகாமையாளர் என்பது பொலிஸ் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி, ஹொரணையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையிலிருந்து ஏ.டி.எம் இயந்திரங்களுக்குப் பணம் நிரப்ப எடுத்துச் செல்லப்பட்டபோது, தலைக்கவசம் அணிந்த நபர் ஒருவர் வங்கி ஊழியரைத் தாக்கி பணப் பைகளைக் கொள்ளையடித்துச் சென்றார். ஆரம்பத்தில் கொள்ளையடிக்கப்பட்ட தொகை 3.5 கோடி ரூபாய் எனக் கூறப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளில் மொத்தமாக 6 கோடியே 79 இலட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்த கொழும்பு தெற்கு வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினர், வங்கியின் உள் விவகாரங்கள் தெரிந்த ஒருவரின் பங்களிப்பின்றி இத்தகைய பெரிய கொள்ளை சாத்தியமில்லை என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகளைத் தீவிரப்படுத்தினர். சிசிடிவி காணொளிகள் மற்றும் தொலைபேசி அழைப்பு தரவுகளை பகுப்பாய்வு செய்ததன் விளைவாக, வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் முதலில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின்போது, உதவி முகாமையாளரின் திட்டப்படியே இந்தக் கொள்ளை அரங்கேற்றப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. இதைத் தொடர்ந்து, கொள்ளைச் சம்பவத்தை நேரடியாக நடத்திய பிரதான சந்தேகநபர் ஹபரடுவ பகுதியிலும், அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் சிலரும் நாட்டின் பல பாகங்களில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் அளித்த தகவலின் பேரில், பாணந்துறை, அங்குருவாதொட்டை உள்ளிட்ட பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 6 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பணம் மீட்கப்பட்டது. கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள பணத்தை மீட்கும் பணிகளும், இந்தச் சம்பவத்தில் வேறு எவரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் பொலிஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
