Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

10 கி.மீ உயரத்திற்குச் சீறிய சாம்பல்: இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு - சுற்றுலாப் பயணிகள் பலி
World

10 கி.மீ உயரத்திற்குச் சீறிய சாம்பல்: இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு - சுற்றுலாப் பயணிகள் பலி

By MadushanMay 8, 2026

இந்தோனேசியாவின் ஹல்மஹேரா தீவில் அமைந்துள்ள துக்கோனோ (Mount Dukono) எரிமலை இன்று வெள்ளிக்கிழமை திடீரென வெடித்துச் சிதறியதில், அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு சிங்கப்பூரர்கள் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இன்று காலை நிகழ்ந்த இந்த பயங்கர வெடிப்பின் போது, சுமார் 10 கிலோமீற்றர் உயரத்திற்குச் சாம்பல் மற்றும் கரும்புகை மேகங்கள் வான்நோக்கிச் சீறியதால் அப்பகுதியே இருள் சூழ்ந்து காணப்பட்டது.

வடக்கு ஹல்மஹேரா பொலிஸ் மா அதிபர் எர்லிக்சன் பாசரிபு இச்சம்பவம் குறித்து ஊடகங்களுக்குத் தகவல் தெரிவிக்கையில், உயிரிழந்த மூவரில் இருவர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்றொருவர் இந்தோனேசியாவின் டெர்னேட் நகரைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி எனவும் குறிப்பிட்டுள்ளார். எரிமலை தொடர்ந்து புகைந்து வருவதாலும், அப்பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகவும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதில் மீட்புக் குழுவினருக்கு பெரும் சவால்கள் நிலவி வருகின்றன.

எரிமலை வெடித்த சமயத்தில் சுமார் 20 பேர் அந்தப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது. இவர்களில் 9 பேர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட தீவிர மீட்புப் பணிகளின் மூலம் 15 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும், சுமார் 10 பேர் இன்னும் மலைப்பகுதியில் சிக்கியிருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுவதால் தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்த அனர்த்தத்தில் சிக்கி 5 மலையேற்ற வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளதாகத் தேசிய அனர்த்த முகாமைத்துவ முகவரகம் தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துக்கோனோ எரிமலை கடந்த சில வாரங்களாகத் தீவிரமான செயல்பாடுகளைக் காட்டி வந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் அந்தப் பகுதி சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக, எரிமலைக் குழியிலிருந்து 4 கி.மீ சுற்றளவுக்குள் யாரும் நுழைய வேண்டாம் என அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், அதிகாரிகளின் தடையையும் மீறி, சமூக ஊடகங்களில் (Social Media) பதிவிடுவதற்காகப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுக்கச் சென்ற வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாகப் பொலிஸார் கவலை வெளியிட்டுள்ளனர். 1933-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாகச் சிறிய அளவிலான வெடிப்புகளை ஏற்படுத்தி வரும் துக்கோனோ, இந்தோனேசியாவின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தற்போதைய சூழலில் சாம்பல் மழை பொழியக்கூடும் என்பதால், அப்பகுதி மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது பொலிஸார், ராணுவம் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், இந்த விபத்தில் சிக்கிய தனது நாட்டுப் பிரஜைகளின் நிலை குறித்து சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio