Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

6-வது முறையாக உலகக்கிண்ணத்தில் ரொனால்டோ: மறைந்த வீரருக்கு போர்த்துக்கல் அணி நெகிழ்ச்சி மரியாதை!
Sports

6-வது முறையாக உலகக்கிண்ணத்தில் ரொனால்டோ: மறைந்த வீரருக்கு போர்த்துக்கல் அணி நெகிழ்ச்சி மரியாதை!

By MadushanMay 20, 2026

உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஃபிபா உலகக்கிண்ண கால்பந்து தொடர் வரும் ஜூன் மாதம் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான தகுதிச் சுற்று மற்றும் அணித் தேர்வுகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், சர்வதேச கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துக்கல் அணிக்காக 6-வது முறையாக களமிறங்கவுள்ள அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து உலகக்கிண்ணத் தொடர்களில் பங்கேற்று சாதனை படைத்து வரும் ரொனால்டோவுக்கு, இதுவே கடைசி உலகக்கிண்ண சீஸனாக இருக்கும் என்று பரவலாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அவரது கோடி கணக்கான ரசிகர்கள் இந்த தொடரை பெரும் ஆவலுடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். தனது கடைசி உலகக்கிண்ணத் தொடரில் முத்திரை பதித்து, கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் ரொனால்டோவும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையில், போர்த்துக்கல் கால்பந்து அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள உலகக்கிண்ண வீரர்களின் பட்டியல் ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் நேரிட்ட பயங்கர கார் விபத்தில் அநியாயமாக உயிரிழந்த தங்களது சக வீரரான டியாகோ ஜோடாவுக்கு மரியாதை அளிக்கும் விதமாக, இந்த உலகக்கிண்ணத்திற்கான அணியில் அவரது பெயரையும் நிர்வாகம் சேர்த்துள்ளது.

பொதுவாக உலகக்கிண்ணத் தொடருக்கான அணியில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீரர்களே அறிவிக்கப்படும் நிலையில், போர்த்துக்கல் நிர்வாகம் இதனை 27+1 வீரர்கள் எனக் குறிப்பிட்டு, மறைந்த ஜோடாவின் பெயரை இணைத்து அறிவித்துள்ளது. களத்தில் அவர் இல்லாவிட்டாலும், அணியின் ஒரு அங்கமாக அவர் என்றும் இருப்பார் என்பதை உணர்த்தும் போர்த்துக்கல் அணி நிர்வாகத்தின் இந்த உன்னதமான செயல், தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளதுடன், உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio