
Montreal நகர மையத்தில் துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல்துறை
கனடாவின் Montreal நகரின் மையப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Ville-Marie வட்டாரத்தில் உள்ள Young மற்றும் William தெருக்கள் சந்திப்பில், இரவு சுமார் 11 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக Montreal காவல்துறை (SPVM) உறுதி செய்துள்ளது.
துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியைச் சுற்றிவளைத்தனர். அங்கு பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லாத போதிலும், தரையில் சிதறிக் கிடந்த தோட்டாக்களின் உறைகள் (shell casings) கைப்பற்றப்பட்டன. இதன் மூலம் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது உறுதியாகியுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், புலனாய்வாளர்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவு (K9 unit) அடங்கிய குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், குற்றவாளிகளை அடையாளம் காணும் நோக்கில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
